பக்கங்கள்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாம்! தி.மு. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!


சென்னை, ஏப்.8 “மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது கடும் கண்ட னத்துக்குரியது”, என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு. கழகச் செயல் தலைவர்  6.4.2018 அன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவக் கல்வியில் சேருவதற்கான “நீட்” தேர்வை, பல்வேறு மாநிலங்களில் உள்ள சமுதாய அமைப்புகளும், மாணவர்களும் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவை முற்றிலுமாகச் சிதைத்துவிட்ட மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட (ஆயுஷ் ) படிப்புகளில் சேரு வதற்கும் நீட் தேர்வு கட்டாயம் என்றும், நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில உரிமைகளுக்கு
முற்றிலும் விரோதமானது!
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நீட் தேர்வை அவசர அவசரமாக திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையை அத்துமீறிப் பறித்துவிட்ட மத்திய பா.ஜ.க. அரசு இப்போது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் சேரு வதற்கும் “நீட்” தேர்வை கட்டாயம் கடைப்பிடிக்க வேண் டும் என்று உத்தரவிடுவது சமூகநீதிக் கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானது மட்டுமல்ல, மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாகவே நான் கருதுகிறேன்.
கிராமப்புறங்களுக்குத் தேவைப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில், ஏற்கெனவே நீட் தேர்வு மூலம் அடாவடியாக செயல்பட்டுக் கொண்டி ருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது கிராமப்புற சுகாதாரத் தேவைகளுக்காக எஞ்சியிருக்கும் சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்புகளின் மீதும் கை வைப்பது எதேச்சதிகாரமானது.
அதுமட்டுமின்றி, கிராமப்புற மக்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கு என்ன என்ற பா.ஜ.க.வின் உள்நோக்கத் தையும் மக்கள் விரோத
எண்ணத்தையும் இது வெளிப் படுத்துகிறது.
ஆகவே, சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்பு களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் உத்தரவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறேன்.


கிராமப்புற வளர்ச்சியில், அங்குள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளில் உள்ளபடியே மத்திய பா.ஜ.க. அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், சித்தா உள்ளிட்ட  ஆயுஷ் படிப்புகளுக்கு பிளஸ் டூ அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிப்பது மட்டுமின்றி, மருத்துவப் படிப்பிற்கும் ‘நீட்’ தேர்விலிருந்து விலக் களிக்கும் விதத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமன தாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தரவேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு. கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 8.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக